பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை சென்னை வருகை - எல்.முருகன் தகவல்


பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை சென்னை வருகை - எல்.முருகன் தகவல்
x
தினத்தந்தி 12 Jan 2021 9:10 PM GMT (Updated: 12 Jan 2021 9:10 PM GMT)

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். பொங்கல் மற்றும் துக்ளக் விழாவில் அவர் பங்கேற்கிறார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பா.ஜ.க.வின் அகில பாரத தலைவர் ஜே.பி.நட்டா வரும் 14-ந் தேதி (நாளை) தமிழர் திருநாள் அன்று சென்னை வருகிறார். அன்று மாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க, கலை நிகழ்ச்சிகளோடு உற்சாகமாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

விமான நிலையத்தில் இருந்து சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள ‘நம்ம ஊரு பொங்கல் விழா’ நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இதற்கென மதுரவாயலில் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பொங்கல் வைக்கும் விழா, விளையாட்டு போட்டிகள், தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு ஏற்பாடுகள் என காணும் பொங்கலை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

முக்கிய சந்திப்பில் இருந்து ஜே.பி.நட்டா மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்படுகிறார். பொங்கல் விழாவில் அகில பாரத தலைவர் ஜே.பி.நட்டா உரையாற்றுகிறார்.

பின்னர், கலைவாணர் அரங்கில் நடைபெறும் துக்ளக் பத்திரிகை விழாவில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு அங்கிருந்து சென்னை விமான நிலையம் சென்று, டெல்லி புறப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story