எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மக்கள் ‘டாட்டா' காட்ட தயாராகி விட்டார்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு


எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மக்கள் ‘டாட்டா காட்ட தயாராகி விட்டார்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2021 10:15 PM GMT (Updated: 12 Jan 2021 10:02 PM GMT)

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மக்கள் ‘டாட்டா' காட்ட தயாராகிவிட்டார்கள் என்று கொளத்தூர் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில், பாரத் ராஜீவ்காந்தி நகர் பூங்கா மேம்படுத்தும் பணி, திருமலை நகர் பூங்கா மேம்படுத்தும் பணி, மகாவீர் நகர் பூங்கா மேம்படுத்தும் பணி, செந்தில் நகர் 10-வது தெருவில் உள்ள பூங்காவினை மேம்படுத்தும் பணி, வி.வி.நகர் விளையாட்டுத் திடல் மேம்படுத்தும் பணி, அஞ்சுகம் நகர் 4-வது தெருவில் உள்ள பூங்கா மேம்படுத்தும் பணி, வெங்கட் நகரில் கன்சர்வேன்சி இன்ஸ்பெக்டர் அலுவலகம் கட்டும் பணி போன்றவற்றிற்கு நேற்று அடிக்கல் நாட்டினார்.

குருகுலம் பள்ளியில் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’யில் தையல் பயிற்சி முடித்த 196 பெண்களுக்கு தையல் எந்திரம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கினார். மேலும் அந்த அகாடமியில் கணினி (டேலி) பயிற்சி முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் சான்றிதழ் மற்றும் பொங்கல் பரிசு வழங்கினார்.

தொகுதி மக்களுடன் சேர்ந்து பொங்கல் விழாவை மு.க.ஸ்டாலின் கொண்டாடினார்.

பின்னர் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ மாணவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ எதற்காகத் தொடங்கப்பட்டது என்று உங்களுக்கெல்லாம் தெரியும். நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத காரணத்தால் மருத்துவ கனவு கனவாகவே போய்விட்டது என்ற ஏக்கத்தின் காரணமாக மனம் வெதும்பி அரியலூர் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா என்ற சகோதரி தற்கொலை செய்து கொண்டு மாண்ட கொடுமை நடந்தது.

நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தோம், அதன் நிலை என்னவென்று தெரியவில்லை. தட்டிக்கேட்கின்ற அரசு தமிழகத்தில் இல்லை. 4 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றபோது, அந்த நீட் தேர்விலிருந்து எந்த முறையில் விலக்குபெற வேண்டுமோ, அந்த விலக்கைப்பெறுவோம். அதற்காக எங்களது சக்தி முழுவதையும் பயன்படுத்துவோம் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்வதை என்னுடைய கடமையாகக் கருதுகிறேன்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். தை பிறக்கப்போகிறது. வழி பிறக்கப்போகிறது. தேர்தல் வருகின்ற காரணத்தால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தினமும் புதிய புதிய அறிவிப்புகளை கொடுத்துக்கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. இப்போது ‘டேட்டா கார்டு’ தரப்போவதாக சொல்லியிருக்கிறார். ‘டேட்டா கார்டு, டேட்டா கார்டு’ என்று சொல்லும் அவருக்கு ‘டாட்டா’ காட்ட தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story