சிறப்பாக பணியாற்றிய 3,186 போலீசாருக்கு பதக்கம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு


சிறப்பாக பணியாற்றிய 3,186 போலீசாருக்கு பதக்கம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 14 Jan 2021 5:55 AM GMT (Updated: 14 Jan 2021 5:55 AM GMT)

சிறப்பாக பணியாற்றிய 3,186 போலீசாருக்கு பொங்கல் திருநாளையொட்டி பதக்கம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

பொங்கல் திருநாளையொட்டி சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கங்கள் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர்நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 120 அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல் நிலை மற்றும் 2-ம் நிலை வார்டர் நிலைகளில் 60 நபர்களுக்கும் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, பிப்ரவரி 1-ந் தேதி முதல் வழங்கப்படும். மேலும், காவல் வானொலி பிரிவு, நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்த பதக்கத்தை பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத தக்கவாறு ரொக்கத்தொகை வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்-அமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story