அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்து விடுவதில் உரிமையாளர்களுக்கு இடையே மோதல் 2 பேருக்கு கத்திகுத்து
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்து விடுவதில் உரிமையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு கத்திகுத்து விழுந்தது.
மதுரை
பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர், பார்வையாளர் என 58 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மதுரையில் கரடிக்கல் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (27), தேவேந்திரன் (25). இவர்கள் இருவரும் தங்கள் மாட்டை அவிழ்த்து விடுவதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது அருகில் இருந்த வேறு ஒருவருடன் மாட்டை யார் முதலில் அவிழ்த்து விடுவது என்று தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இவர்கள் இருவருக்கும் கத்திகுத்து விழுந்தது. அவர்கள் இருவரும் உடனடியாக உள்ளே இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இருவருக்கும் காயம் பலமாக இருந்ததால் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவத்திற்கு காரணமானவர்களில் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story