கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால் தான்; தோல்வி இல்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்


கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால் தான்; தோல்வி இல்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 16 Jan 2021 11:41 AM GMT (Updated: 16 Jan 2021 11:54 AM GMT)

கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால்தான்;யாருக்கும் பக்க விளைவுகள் ஏதுமில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

சென்னை

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷில்டு’ என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார். முதன் முதலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுகாதார பணியாளர் மணீஷ் குமாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  தொடங்கி வைத்தனர். 

தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 14 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. கோவையில் 4, மதுரையில் 5, திருச்சி 5, சேலத்தில் 7 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் முதல் தடுப்பூசி அரசு மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 தமிழகத்தில் இதுவரை சுமார் 3,000 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கோவின் செயலியில் ஒரே நேரத்தில் அதிகளவு பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்ய முயன்றதால் சிறிது நேரம் செயலி முடங்கியது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வதற்கான கோவின் செயலியும் சரியாக இயங்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மையத்தில் இருவர் மட்டுமே தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் இன்று 500 நபர்களுக்கு தடுப்பூசி போடவேண்டிய நிலையில் 150 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் மையத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்

திட்டமிட்டப்படி ஒரு நாளில் ஒவ்வொரு மையத்திலும் 100 பேருக்கு தடுப்பூசி போட்டாக வேண்டிய கட்டாயம் இல்லை. கொரோனா தடுப்பூசி போடுவதில் இலக்கை நோக்கிய திட்டம் இல்லை .  தமிழகத்தில் இதுவரை சுமார் 3,000 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால்தான், தோல்வியில்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. முன்பதிவு செய்தவர்களை அடிப்படையாக கொண்டு 166 மையங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏதுமில்லை என தகவல்கள் வந்துள்ளன. விருப்பத்திற்கேற்பவே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

Next Story