தொடர் மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு - இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Jan 2021 10:18 PM GMT (Updated: 16 Jan 2021 10:18 PM GMT)

தொடர் மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

சென்னை, 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு நிவர் மற்றும் புரெவி புயல்கள் மற்றும் தொடர்மழையால் நெற்பயிர்கள் உள்பட பலவகைப் பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. தாளடி சாகுபடியில் தண்ணீர் தேங்கியதால் நடப்பட்ட பயிர்கள் அழுகிவிட்டன. சம்பா பயிர்கள் விளைந்து, முதிரும் பருவத்தில் நெல்மணிகள் அவிழ்ந்து, விளைந்த கதிர்கள் தொடர் மழையால் முளைப்பு விட்டு சேதமடைந்துவிட்டன.

இதேபோல் நிலக்கடலை, உளுந்து போன்ற எண்ணெய் வித்து மற்றும் பருப்புவகை பயிர்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இந்தநிலையில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் கோரப்பட்ட நிலையில், ரூ.8 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக அறிவித்திருப்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. சேதாரத்தை ஈடுகட்டி விவசாயிகள் மறுவாழ்வு தொடங்க தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும். விவசாயிகள் சேதாரத்தை முறையாகக் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story