குடியரசு தின விழா ஒத்திகை: மெரினா காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Jan 2021 11:15 PM GMT (Updated: 18 Jan 2021 11:15 PM GMT)

குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக மெரினா காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அங்கு 20, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக அப்பகுதியில் குறிப்பிட்ட இந்த 4 நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

* அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை நீல்கிரீஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

* அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உள்பட) சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். அவைகள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீல்கிரீஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்திசிலை நோக்கி செல்லும் மாநகர பஸ் தடம் எண். 27டி ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம்.தெரு சந்திப்பில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, அவைகள் வி.எம்.தெரு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்கு கெனால்பேங்க் ரோடு, சீனிவாசாபுரம் வழியாக பட்டினப்பாக்கம் சென்றடையலாம்.

* மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்திசிலை நோக்கி வரும் மாநகர பஸ் வழித்தடம் எண். 21 ஜி ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி விடப்பட்டு, அவை ராயப்பேட்டை மேம்பாலம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

* மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணாசதுக்கம் நோக்கி வரும் மாநகர பஸ் வழித்தடம் எண்.45 பி மற்றும் 12 ஜி ஆகியவை நீல்கிரீஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை, வாலாஜாசாலை வழியாக அண்ணாசதுக்கம் சென்றடையலாம்.

* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்திசிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பில் டாக்டர் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும். டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ்அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.

* டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ்அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும். பாரதிசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். மாநகர பஸ்கள் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படும்.

* அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பஸ் நிலையம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்க பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜாஅண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணாசிலை, அமெரிக்க தூதரகம் சர்வீஸ் ரோடு, கதீட்ரல்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, காரணீஸ்வரர் பகோடா தெரு, சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம். வாலாஜாபாயிண்ட் மற்றும் அண்ணாசாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.

வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story