என்ஜினீயரிங் மாணவர்களுக்கு 18-ந்தேதி வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


என்ஜினீயரிங் மாணவர்களுக்கு 18-ந்தேதி வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2021 10:58 PM GMT (Updated: 21 Jan 2021 10:58 PM GMT)

2-வது மற்றும் இறுதியாண்டு செமஸ்டர் தவிர்த்து மற்ற என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 18-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

தன்னாட்சி அதிகாரம் இல்லாத இணைப்பு என்ஜினீயரிங் கல்லூரிகளில் பிப்ரவரி-ஜூன் மாதத்துக்கான செமஸ்டர் வகுப்புகள் தொடர்பான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2-வது மற்றும் இறுதியாண்டு செமஸ்டர் மாணவர்களை தவிர பிற செமஸ்டர் மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 18-ந்தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாணவர்களுக்கான இறுதி வேலை நாள் மே 21-ந்தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வாரத்துக்கு 6 நாட்கள் வேலை நாளாக கருத்தில் கொண்டு, மே 21-ந்தேதி வரையிலான நாட்களுக்கு இடைப்பட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தலாம். வகுப்புகள் அரசின் உத்தரவின்படி ஆன்லைன் மூலம் நடத்தப்பட வேண்டும்.

இவர்களுக்கான செய்முறைத்தேர்வு மே 24-ந்தேதியும், எழுத்து தேர்வு ஜூன் 2-ந்தேதியும் தொடங்கி நடைபெறும். இந்த தேர்வுகள் அனைத்தும் முடிந்து அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஜூலை 1-ந்தேதி தொடங்கும்.

இதேபோல், டிசம்பர்-மே மாதத்துக்கான இறுதி செமஸ்டர் வகுப்புகள் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகின்றன. இவர்களுக்கான கடைசி வேலை நாள் ஏப்ரல் 12-ந்தேதி ஆகும். இந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 15-ந்தேதி நடைபெறும். எழுத்துத்தேர்வு ஏப்ரல் 26-ந்தேதி முதல் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story