இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் - கமல்ஹாசன் டுவீட்


இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் - கமல்ஹாசன் டுவீட்
x
தினத்தந்தி 22 Jan 2021 3:27 PM GMT (Updated: 22 Jan 2021 3:27 PM GMT)

எமது மீனவர்கள் உயிரிழக்க காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

ராமேசுவரம் அருகே கச்சத்தீவு பகுதியில் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ரோந்து கப்பல், அந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் கடற்படை கப்பலை மீன்பிடி படகில் மோதவிட்டனர்.

இதில் படகு உடைந்து மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அவர்களில் 4 மீனவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

இந்தநிலையில் 4 பேரின் உடல்களும் இலங்கை கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று அடித்து கொலை செய்து கடலில் வீசி விட்டதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

கப்பலை மோதவிட்டு 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை தூதரிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கைக் கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன். பாரம்பரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித் தொழில் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு செய்யவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Next Story