ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை


ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 23 Jan 2021 1:25 AM GMT (Updated: 23 Jan 2021 1:25 AM GMT)

ஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் 4 வெவ்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. இங்கு ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலரும் தங்கள் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று வருகிறார்கள்.

ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் மேலாளராக கர்நாடக மாநிலம் தும்கூரைச் சேர்ந்த சீனிவாச ராகவா (வயது 28) என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 9.30 மணி அளவில் வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது வாடிக்கையாளர்கள் போல 6 பேர் கொண்ட கும்பல் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்தது. கையில் துப்பாக்கிகள் மற்றும் கத்தியுடன் வந்த அவர்கள் துப்பாக்கியை காட்டி நிதி நிறுவன மேலாளர் சீனிவாச ராகவா மற்றும் ஊழியர்கள் மாருதி (24), பிரசாத் (29), காவலாளி ராஜேந்திரன் (55) மற்றும் வாடிக்கையாளரான ஓசூர் பஸ்தி பகுதியைச் சேர்ந்த ராஜூ (22) ஆகியோரை தாக்கி கை, கால்களைக் கட்டிப்போட்டனர். மேலும் ஊழியர்கள் சத்தம் போடாமல் இருக்க வாயில் பிளாஸ்திரி ஒட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் நிதிநிறுவன லாக்கரின் சாவியை வாங்கி அதிலிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகள், ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.

கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பிறகு நிதி நிறுவன ஊழியர்கள் கை, கால்கள் கட்டுகளை அவிழ்த்து, இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கொள்ளை சம்பவம் நடந்த நிதி நிறுவனத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். மேலும் நிதி நிறுவன வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொள்ளையர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்தபடி வந்திருந்தனர். முகமுடியும் அணிந்து இருந்தனர். இந்த கொள்ளை தொடர்பாக கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாக்கரில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் பைரவி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அது அந்த பகுதியில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் இதைப்போல நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஈடுபட்டுள்ள கும்பலுக்கு இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் இந்தியில் பேசிக்கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர் கள் என்றும் கூறப்படுகிறது. கொள்ளையர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் நகரின் மையப்பகுதியில், பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொள்ளை குறித்து போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியர்களை துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் மிரட்டி சிலர் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்கள் மொத்தம் 6 பேர் வந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து வருகிறோம்.

மேலும் கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொள்ளையர்கள் இந்தி மொழியில் பேசியதாக நிதி நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் வடமாநில கொள்ளை கும்பலுக்கு இதில் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி பேங்க் ஆப் பரோடா கிளையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி அதிகாலையில் வடமாநில கொள்ளை கும்பல் புகுந்தது. அவர்கள் வங்கியின் லாக்கரை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து 6,500 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ. 12 கோடி ஆகும்.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி சூளகிரி அருகே மேலுமலையில் செல்போன்கள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை வழிமறித்து டிரைவர், கிளீனரை தாக்கி அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன் களை வடமாநில கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது நேற்று ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள 25 கிலோ நகைகளை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் நகை கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆண், பெண் வாடிக்கையாளர்கள் பதற்றத்துடன் அந்த நிதி நிறுவன வளாகத்தில் திரண்டனர். நாங்கள் இந்த நிதி நிறுவனத்தில் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று உள்ளோம். எங்களின் நகைகள் என்ன ஆனது? எனக் கேட்டு அவர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். அவர்களை ஓசூர் அட்கோ போலீசார் சமாதானப்படுத்தினார்கள். இதனால் நிதி நிறுவன வளாகத்தில் நீண்ட நேரம் பதற்றமாக காணப்பட்டது.

இதனிடையே கொள்ளைக்கும்பல், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் வழியாக தப்பி சென்றது தெரிய வந்துள்ளது. மேலும், ஆனேக்கல் அருகே பஸ்திபூர் என்ற இடத்தில் அவர்கள் ஓசூர் நிதி நிறுவனத்தின் மேலாளர் சீனிவாசராகவிடம் பறித்த செல்போனை, வீசிச்சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அங்கு கிடந்த காலி பை ஒன்றையும் தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.

தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ஒரு பையை எடுத்து அதில் நகைகளைப் போட்டு கொண்டு தப்பி சென்று உள்ளனர். அந்த பை ஜி.பி.எஸ். டிராக்கிங் டிவைஸ் பொருத்தப்பட்ட பை ஆகும். இதன் மூலம் அந்த பையை கொள்ளையர்கள் எந்த பகுதிக்கு கொண்டு செல்கிறார்கள் என்று பார்த்தபோது அவர்கள் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பகுதிக்கு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். மேலும் அந்த பை எந்தப் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Next Story