சீர்காழி நகை கொள்ளை சம்பவம்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


சீர்காழி நகை கொள்ளை சம்பவம்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 27 Jan 2021 8:52 PM GMT (Updated: 27 Jan 2021 8:52 PM GMT)

வசதியாக வாழ நினைத்த கொள்ளையர்கள், நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

சீர்காழி,

சீர்காழியில், நகைக்கடை உரிமையாளரின் மனைவி-மகனை கொன்று விட்டு 17 கிலோ நகைகளை வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். நகைகளுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றான்.

இதனால் போலீசார் திருப்பி சுட்டதில் கொள்ளையர்களில் ஒருவன், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையானான். மேலும் 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. 

அதன் விவரம் வருமாறு:- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் மஹிபால், மணிஷ், ரமேஷ் ஆகிய 3 பேரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இவர்களில் மணிஷ் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிளைவுட் கடையிலும், ரமேஷ் மற்றும் மஹிபால் ஆகிய இருவரும் கும்பகோணம் பகுதியில் உள்ள கடைகளிலும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சீர்காழியில் நகைக்கடை மற்றும் நகை அடகுக்கடை வைத்து நடத்தி வரும் தன்ராஜ் சவுத்ரி தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானிற்கு செல்லும்போது அங்கு நடக்கும் விழாக்களில் பெயர் சொல்லும் அளவிற்கு நிதி உதவியும், பொருள் உதவியும் வழங்கி வந்துள்ளார். இதனை வடமாநில ெகாள்ளையர்களான மஹிபால், ரமேஷ், மணிஷ் ஆகிய 3 பேரும் அறிந்து கொண்டனர்.

இதனையடுத்து அவரைப்போல் தாங்களும் வசதியாக வாழவேண்டும் என எண்ணிய 3 பேரும் தன்ராஜ் சவுத்ரி வீட்டில் நகைகள் இருப்பதை அறிந்து அவரது வீ்ட்டில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படியே இவர்கள் 3 பேரும் நேற்று காலை தன்ராஜ் சவுத்ரியின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் மகனை கொன்று வீட்டில் இருந்த 17 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

Next Story