தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 5-க்கும் குறைவானவர்களுக்கு தொற்று


தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 5-க்கும் குறைவானவர்களுக்கு தொற்று
x
தினத்தந்தி 27 Jan 2021 10:01 PM GMT (Updated: 27 Jan 2021 10:01 PM GMT)

தமிழகத்தில் நேற்று 13 மாவட்டங்களில் 5-க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 55 ஆயிரத்து 910 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 305 ஆண்கள், 207 பெண்கள் என மொத்தம் 512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 159 பேரும், கோவையில் 51 பேரும், செங்கல்பட்டில் 28 பேரும், திருவள்ளூரில் 26 பேரும், திருப்பூரில் 23 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விருதுநகரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் நேற்று ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை.

இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 5 பேருக்கும், 12 வயதுக்குட்பட்ட 22 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 120 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 மாவட்டங்களில் 5-க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 54 லட்சத்து 97 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 36 ஆயிரத்து 315 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 5 ஆயிரத்து 456 ஆண்களும், 3 லட்சத்து 30 ஆயிரத்து 825 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 30 ஆயிரத்து 169 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 831 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 8-ந் தேதி முதல் நேற்று வரை தமிழகம் வந்த 961 பேரில் 756 பேர் கண்டறியப்பட்டு பரிசோதித்ததில், 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 720 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. மீதமுள்ள 34 பயணிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 8 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 4 பேரும், ஈரோட்டில் 2 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா ஒருவரும் என 4 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 12 ஆயிரத்து 333 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 564 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 162 பேரும், கோவையில் 65 பேரும், செங்கல்பட்டில் 58 பேரும், திருவள்ளூரில் 25 பேரும், திருப்பூரில் 23 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 19 ஆயிரத்து 306 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து உள்ளனர்.

தற்போது சிகிச்சையில் 4 ஆயிரத்து 676 பேர் உள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 940 பேர், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த ஆயிரத்து 36 பேர், ரெயில் மூலம் வந்த 428 பேர், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 574 பேர், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story