சீர்காழியில் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்


சீர்காழியில் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
x
தினத்தந்தி 28 Jan 2021 8:57 AM GMT (Updated: 28 Jan 2021 8:57 AM GMT)

சீர்காழியில் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.


மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த நகை வியாபாரி தன்ராஜ் என்பவரது வீட்டில், 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தன்ராஜின் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) ஆகியோரை கொடூரமாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். 

மேலும் இந்த கொடூர தாக்குதலில் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நிகில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கொலையாளிகள் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்ததுடன், சிசிடிவியின் ஹார்டுடிஸ்க் மற்றும் கார் உள்ளிட்டவற்றையும் கொள்ளை கும்பல் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியானது. 

இந்த சம்பவம் தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,கடலூர் மாவட்டம் எருகூர் அருகே வட மாநிலத்தை சேர்ந்த மனீஷ், ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 கிலோ தங்க நகைகள், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கொள்ளையர்களில் ஒருவரான மஹிபால் என்பவன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். கொள்ளையர்கள் 3 பேரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்கள் தப்ப முயன்ற போது என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொள்ளையர்களில் ஒருவரான கருணாராம் என்பவர் தப்பியோடிய நிலையில், அவரை கும்பகோனத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கருணாராம், சீர்காழி அழைத்து வரப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இந்நிலையில் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேர் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அமிர்தம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Next Story