அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கனிமொழி எம்.பி. பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை:  கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 30 Jan 2021 5:49 AM GMT (Updated: 30 Jan 2021 5:56 AM GMT)

அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

அறந்தாங்கி:

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் விவசாயிகள் சந்திப்பு கூட்டம், மகளிருடன் கலந்துரையாடல், மக்கள் கிராமசபை கூட்டம், தி.மு.க. பொருப்பாளர்களுடன் கலந்துரையாடல்  உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அறந்தாங்கியில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து கனிமொழி எம்.பி.பேசும்போது,  தமிழகத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் துப்புரவு தொழிலாளர் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு்ளனர். அறந்தாங்கி தொகுதியில் தி.மு.க. ஆட்சியில்தான் அதிக சாலைகள், பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, அவைகள் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் என தனியாக கொண்டு வந்தது தி.மு.க.ஆட்சியில் தான் என்றார். பின்னர் அவர் கட்சி பொருப்பாளர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து அவர், நாகுடி, ஆவணத்தாங்கோட்டை விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். 

இதில் அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆவுடையார்கோவில் ஒன்றிய தி.மு.க. செயலாளருமான உதயம் சண்முகம், ஆவுடையார்கோவில் ஒன்றிய கவுன்சிலர்கள் புண்ணியவயல் செந்தில்குமரன், பொன்பேத்தி சுந்தரபாண்டியன், தெற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பாரதிராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர். சதீஷ்குமார், தெற்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளர் கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருமயம் அருகே துளையானூர் ஊராட்சி சோளத்தாகோவிலில் கனிமொழி எம்.பி.நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே தி.மு.க.வின் கோரிக்கை.  தி.மு.க. மற்றவர்களைப்போல் நிமிடத்திற்கு நிமிடம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை, ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று கூறிவிட்டு, அவர் தொடர்ந்து எதிர்த்து வந்த உதய் மின் திட்டம், நீட் தேர்வு உள்ளிட்டவற்றை கொண்டு வந்துள்ளனர்.

அ.தி.மு.க.வினர் புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை, பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இந்த ஆட்சியில் இல்லை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து வருகின்றது, குழந்தை முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதுதான் ஜெயலலிதா வழியில் நடத்தும் ஆட்சியா?.

தி.மு.க.வின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவது உறுதி. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி விரிசல் என்பது புனையப்பட்ட கதை. இதனை தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

அரிமளம் ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி தாஞ்சூர் கிராமத்தில் நடந்த விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் கனிமொழி எம்.பி.பேசும்போது,  தாஞ்சூர் கிராமத்தில் தானியங்கள் பாதுகாப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  நிலத்தடி நீரை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளிக்கிறேன். தொடர் மழையால் நெற்பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.அரசு போதுமான நிவாரணம் இதுவரை அளிக்கவில்லை. எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாய சங்கங்களும், தி.மு.க.வும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறப்பதற்கு ஆட்சிமாற்றம் தான் ஒரே வழி என்றார்.

Next Story