சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் - நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல்துறை தகவல்


சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் - நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல்துறை தகவல்
x
தினத்தந்தி 2 Feb 2021 8:24 AM GMT (Updated: 2 Feb 2021 8:24 AM GMT)

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலையே என, நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி, தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, கணவர் ஹேம்நாத்தை கைது செய்தார். 

இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக  அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை  பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

Next Story