நெல்லை அருகே வாலிபரை படுகொலை செய்து துண்டித்த தலையுடன் போலீஸ் நிலையம் வந்த அண்ணன்-தம்பி
நெல்லை அருகே வாலிபரை படுகொலை செய்த அண்ணன்-தம்பி துண்டிக்கப்பட்ட அவரது தலையுடன் வந்து போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
வாலிபர் படுகொலை
நெல்லை அருகே தாழையூத்து பூலித்தேவன் நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் சிதம்பர செல்வம் என்ற கோழி (வயது 23), கூலி தொழிலாளி. இவர் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த தன்னுடைய உறவினர்களான முருகன் மகன்கள் பாலாஜி (39), ராமையா (37) ஆகியோருடன் அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாலாஜியின் குடும்பத்தினரைப் பற்றி சிதம்பர செல்வம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் சிதம்பர செல்வத்தின் கழுத்தில் சரமாரியாக வெட்டினர். மேலும் ஆத்திரம் தீராத அவர்கள், ஆட்டை அறுப்பது போன்று சிதம்பர செல்வத்தின் கழுத்தை அறுத்தனர். இதில் தலை துண்டிக்கப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தலையுடன் போலீசில் சரண்
படுகொலை செய்யப்பட்ட சிதம்பர செல்வத்தின் தலையை தனியாக துண்டித்து எடுத்த பாலாஜி, ராமையா இருவரும், அந்த தலையுடனும், ரத்தம் தோய்ந்த அரிவாள்களுடனும் தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரும் சிதம்பரசெல்வத்தின் தலையை அவரது உடல் இருந்த இடத்திலேயே வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட சிதம்பரசெல்வத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story