எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள்கள் தொடர்ந்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள்கள் தொடர்ந்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 9 Feb 2021 7:33 AM GMT (Updated: 9 Feb 2021 7:33 AM GMT)

கொடிக்கம்பத்தை அகற்றுவது தொடர்பாக எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பிப்ரவரி 11-க்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் கைதாக பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா விடுதலையாகி சென்னை திரும்பியுள்ளார். இதையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் இல்லம் அமைந்திருக்கும் ராமாபுரம் தோட்டத்தில் சசிகலா கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை அமமுக திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செய்திருந்தார். இதற்காக ராமபுரம் தோட்டத்தின் நுழைவாயில் அருகே கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த கொடிக்கம்பம் தங்கள் இல்லத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியும், நடைபாதைக்கு இடையூறாக இருப்பதால், அதனை அகற்றக் கோரி எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களான கீதா, ராதா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

அந்த மனுவில், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பரங்கிமலை துணை ஆணையர், காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டு கொடிக்கம்பம் அகற்றப்பட்டதாகவும், மீண்டும் அதே இடத்தில் தங்கள் அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே அந்த கொடிக்கம்பத்தை அகற்றவும், தங்கள் குடும்பத்தினருக்கு பாதிகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடைபாதயில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே இரண்டு முறை அகற்றப்பட்டு மீண்டும் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 

இதையடுத்து கொடிக்கம்பம் அகற்றப்பட்டதா? இல்லையா? என்பதை சரிபார்த்து தெரிவிக்கும்படி மனுதாரர் தரப்பிற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், அமமுகவின் திருவள்ளூர் மாவட்ட செயலாளருக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story