தமிழக சட்டசபை தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 11 Feb 2021 11:45 AM GMT (Updated: 11 Feb 2021 11:45 AM GMT)

தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தல் நடத்துவது எப்போது, அதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில், ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் சென்னைக்கு நேற்று காலையில் வந்தனர். 2 நாட்கள் தங்கி இருந்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.

கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள, சுனில் அரோரா மற்றும் இந்திய தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், துணை ஆணையர் சந்திரபூஷன் குமார், பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா, இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலாளர் மல்லே மாலிக், கூடுதல் இயக்குனர் ஷிபாலி சரன் ஆகியோர் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை சந்தித்து, தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றிய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.மேலும் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவிடம், ஒரே கட்டமாக தேர்தலை நடத்துங்கள் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பல்வேறு துறை அதிகாரிகளுடன் இன்று 2ம் நாளாக ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர், சுனில் அரோரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் கட்சி பிரதிநிதிகள், போலீஸ் சூப்பிரெண்டுகள், மாவட்ட கலெக்டர்களுடன்  ஆலோசனை நடத்தினோம். இன்று பல துறையை சேர்ந்த அதிகாரிகள், தமிழக அரசின் தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தினோம்.

மே 24-ம் தேதி தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிகிறது. தேர்தல்களில் தமிழகத்தில் அதிகமான வாக்குகள் பதிவாகின்றன. இந்த தேர்தலில் இன்னும் அதிகமான வாக்குகள் பதிவாகும் என நம்புகிறோம். வரும்.

அமைதியான, நேர்மையான, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிய வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும். பெண்கள், முதியவர்கள் வாக்களிக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

கொரோனா காலத்தில் பீகார் தேர்தலை நடத்தியது மிகவும் சவாலாக இருந்தது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நடத்தவும் பாதுகாப்பை அதிகரிக்கவும் வலியுறுத்தின. பணப்பட்டுவாடாவை தடுக்கவும், தேர்தல் பார்வையாளர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

முதியோர்கள் தபால் வாக்குகளாக அல்லாமல் பழைய முறையில் வாக்களிக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

வாக்களிப்பதற்கு கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்கப்படும். மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு நிறைவுற்ற பின், உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படும். ஏற்கெனவே 68 ஆயிரத்து 324 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதனால், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 93 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பணப்பட்டுவாடா தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் இணையதளத்தில் வெளியிடப்படும். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் 24மணிநேரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல், தமிழக சட்டமன்ற தேர்தலுடன் நடத்தப்படும்

உள்ளூர் திருவிழாக்கள், தமிழ் புத்தாண்டு, தேர்வுகள், வெயில் ஆகியவற்றை கருத்தில்கொண்டு தேர்தல் தேதி முடிவெடுக்கப்படும்.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story