மனைவி இறந்த துக்கம் தாளாமல் ஏசி மெக்கானிக் 2 குழந்தைகளைக் கொன்று தூக்கிட்டு தற்கொலை


மனைவி இறந்த துக்கம் தாளாமல் ஏசி மெக்கானிக் 2 குழந்தைகளைக் கொன்று தூக்கிட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Feb 2021 11:43 AM GMT (Updated: 13 Feb 2021 11:43 AM GMT)

மனைவி இறந்து துக்கம் தாளாமல் சோகத்தில் இருந்த ஏசி மெக்கானிக் ஒருவர், தனது 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை

சென்னை கொருக்குப்பேட்டையில் மனைவி இறந்து ஒரு மாதமே ஆன நிலையில், துக்கம் தாளாமல் சோகத்தில் இருந்த ஏசி மெக்கானிக் ஒருவர், தனது 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கொருக்குப்பேட்டை, ஜீவா நகரில் வசித்து வந்தவர் வினோத் (32). இவர் ஏசி மெக்கானிக்காகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கவிதா (28). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. தம்பதிக்கு கவின் (எ) நவீன் (3), பிரவீன் (எ) சக்தி (1) என்கிற 2 குழந்தைகள் இருந்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வினோத், தன் மனைவி கவிதாவுடன் பொன்னேரியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மனைவி கவிதா தாய் வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி உயிரிழந்த நிலையில் இரண்டு கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு பணிக்கும் செல்ல முடியாமல், மனைவியின் நினைவாகவே வினோத் வாடிய நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் மன வருத்தத்தில் இருந்த வினோத் நேற்று நள்ளிரவு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து தனது இரு குழந்தைகளையும் கொன்ற அவர், வீட்டிலுள்ள மின்விசிறி மாட்டும் கொக்கியில் மனைவியின் புடவையால் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டார். காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் வினோத்தின் உடல் இருப்பதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் ஆர்.கே.நகர் போலீஸாருக்குத் தகவல் அளிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வினோத் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story