எடப்பாடி பழனிசாமியின் வேடம் கலைந்து விட்டது: நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய இளங்கீரனை கைது செய்வதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்


எடப்பாடி பழனிசாமியின் வேடம் கலைந்து விட்டது: நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய இளங்கீரனை கைது செய்வதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 14 Feb 2021 3:40 AM GMT (Updated: 14 Feb 2021 3:40 AM GMT)

எடப்பாடி பழனிசாமியின் வேடம் கலைந்து விட்டது: நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய இளங்கீரனை கைது செய்வதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராநந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரனை அடித்து, இழுத்துச் சென்று அராஜகமாக கைது செய்துள்ள அ.தி.மு.க. ஆட்சிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். "விவசாயி" என்று வேடம் போட்டு, நகர்வலம் வந்து கொண்டே தனக்கு கீழ் உள்ள காவல்துறையை விட்டு விவசாய சங்கத் தலைவரை அராஜகமாக கைது செய்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்துள்ளார்.

"மனிதாபிமானம் கிலோ என்ன விலை" என்று விவசாயிகளிடம் கேட்கும் எடப்பாடி பழனிசாமி, ‘என்னை வந்து பார்த்து விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு நன்றி தெரிவித்தார்' என்பதை உள்நோக்கமாக வைத்து இளங்கீரன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் போட்டு மனிதநேயமற்ற முறையில் கைது செய்திருப்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை. விவசாயிக்கு ஒரு கையில் "கடன் தள்ளுபடி அறிவிப்பு" இன்னொரு கையில் கடுமையாகத் தாக்கி "கைவிலங்கு" போடுவது என்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேடம் இதோ கலைந்து விட்டது. அதிகார வெறி தலைக்கேறுவதால் படுதோல்வி அடையப்போவது எடப்பாடி பழனிசாமிதானே தவிர, போராடும் விவசாயிகள் அல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Next Story