பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முக்கிய முடிவு


பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முக்கிய முடிவு
x
தினத்தந்தி 14 Feb 2021 4:33 AM GMT (Updated: 14 Feb 2021 4:33 AM GMT)

சென்னைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரும் பிரதமருடன் 15 நிமிடங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

சென்னை, 

அரசு முறை பயணமாக இன்று சென்னை வரும் பிரதமர் நரேந்திரமோடி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், ஒரு சில திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழா காலை 11.15 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, மதியம் 12.35 மணி முதல் 12.50 மணி வரை, அதாவது அடுத்த 15 நிமிடம் பிரதமர் நரேந்திரமோடி அங்கேயே இருக்கிறார். அந்த 15 நிமிடமும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பயணத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திக்கப்போவது யார்?

எனவே, அந்த குறுகிய நேரத்தில் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கப்போவது யார்? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த நேரத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், இந்த கூட்டணியில் இடம்பெறப்போகும் கட்சிகள் எவை? என்பது இன்னும் முடிவாகவில்லை. நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்திருந்தன.

கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள்

ஆனால், இந்த கூட்டணியில் அப்போது இருந்த கட்சிகளில், எவை.. எவை.. மீண்டும் இடம்பெறும் என்பதே புரியாத புதிராக இருக்கின்றன. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. இழுத்தடித்து வருகிறது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள் என்று தே.மு.தி.க. கோரிக்கை விடுத்தும் அ.தி.மு.க. மவுனம் காத்து வருகிறது.

எனவே, பிரதமருடனான இந்த 15 நிமிட சந்திப்பின்போது, சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் எவை? என்பது இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும்? என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பு

எனவே, பிரதமர் நரேந்திரமோடியுடனான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் சந்திப்பை கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டுமல்லாது, எதிர்வரிசையில் உள்ள கட்சிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன.

Next Story