அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


டாக்டர் ராமதாஸ்
x
டாக்டர் ராமதாஸ்
தினத்தந்தி 14 Feb 2021 10:31 AM GMT (Updated: 14 Feb 2021 10:31 AM GMT)

அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டு பிரச்சினை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இரு எம்.டெக். படிப்புகளின் மாணவர் சேர்க்கையை மீண்டும் தொடங்க சுப்ரீம் கோர்ட்டை அணுகும்படி சென்னை ஐகோர்ட்டு ஆலோசனை வழங்கியும் அதை ஏற்க அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்திருக்கிறது. மாணவர்களின் நலனை பாதிக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் நலன் சார்ந்த இந்த விஷயத்தில் அண்ணா பல்கலைக்கழகம் அதன் பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு சுப்ரீம் கோர்ட்டை அணுகி கூடுதல் அவகாசம் பெற்று மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழக அரசே சுப்ரீம் கோர்ட்டை அணுகி கூடுதல் கால அவகாசம் பெற்று இரு எம்.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஒரு மாதத்துக்குள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story