பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு: வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தை கைவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு: வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தை கைவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Feb 2021 3:58 AM GMT (Updated: 16 Feb 2021 3:58 AM GMT)

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்றும், அரசு வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தை கைவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, சட்டப் பேரவை தேர்தலைக் கருத்தில் வைத்து, பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மதுரை “எய்ம்ஸ்” மருத்துவமனையின் நிலை என்னவென்று அறிந்த தமிழக மக்கள், பிரதமரின் புதிய அறிவிப்புகளின் தன்மையையும் தரத்தையும் நன்கு அறிவார்கள். அவர் வாயால் அறிவிக்கப்படாத ‘பரிசாக’ கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் பயன்படுத்தும் மானியத்துடனான சமையல் கேஸ் சிலிண்டருக்கு கொரோனா காலத்தில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை உயர்த்தி, வதை படு படலத்தைத் தொடங்கிய பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தற்போது மானியமில்லாத சிலிண்டர் விலையையும் ரூ.50 உயர்த்தி தேநீர்க்கடை, சிறு உணவகம் போன்ற எளிய மக்களின் வணிகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த விலை உயர்வுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

‘செஞ்சுரி’ அடிக்கப்போகும் பெட்ரோல் விலை

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு மேல் விற்பனையானபோது, ரூ.450 முதல் ரூ.500-க்குள்ளான விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விற்கப்பட்டது. அதற்கே பா.ஜ.க.வினர் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், அதை வேண்டுமென்றே கணக்கில் கொள்ளாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது.

தற்போது 750 ரூபாய்க்கும் அதிகமாகச் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு விலை கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு மக்களைத் தள்ளியுள்ளது பா.ஜ.க. அரசு. பெட்ரோல் விலை ‘செஞ்சுரி’ அடிக்கப்போகிறது. டீசல் விலை அதனைப் பின் தொடர்கிறது. சமையல் கியாஸ் விலை விண்ணைத் தொடுகிறது.

வரிவிதிப்புகளைக் குறைத்து

இந்திய மக்களுக்கு, பிரதமரும் அவரது அமைச்சரவையும் தருகின்ற கொடுமையான பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு இத்தகைய பரிசுகள் தேவையில்லை. அவர்கள் நிம்மதியாக வாழும் வகையில், வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஈடாக மானியமும் உயர்த்தப்படாததால் ஏழை-நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே கியாஸ் சிலிண்டர் மானியத்தை ரூ.300 ஆக உயர்த்தவேண்டும். அதன்மூலம் மக்களின் துயரத்தை மத்திய அரசு போக்க முன்வர வேண்டும்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து ஏழை-நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறியிருக்கிறது. இந்த நிலையை உணர்ந்து பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாமி உள்பட பலரும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story