அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் லோக் ஆயுக்தா விசாரணைக்கு பரிந்துரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்


அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் லோக் ஆயுக்தா விசாரணைக்கு பரிந்துரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2021 4:01 AM GMT (Updated: 16 Feb 2021 4:01 AM GMT)

தெரு விளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரை, லோக் ஆயுக்தா விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

சென்னை, 

தமிழகம் முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தியதில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதேபோல, கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தலா 5 கிலோ ரேஷன் அரிசி கூடுதலாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கிவிட்டு, மீதமுள்ள அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்ததாக, உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் அப்பாவு மற்றொரு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அரசாணையை எதிர்த்து வழக்கு

அந்த வழக்கு மனுக்களில், அமைச்சர்கள் இருவருக்கும் எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், அந்த புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், பொதுத்துறை செயலாளரின் ஒப்புதலை பெற போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். கவர்னரின் ஒப்புதலை பெற்று வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும், பொது ஊழியர்களுக்கு எதிரான லஞ்ச புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய பொதுத்துறை செயலாளரின் ஒப்புதலை பெறவேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய கோரியும், மேலும் ஒரு வழக்கை அப்பாவு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முகாந்திரம் இல்லை

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், “உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு எதிரான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சருக்கு எதிரான புகாரை பொறுத்தவரை விரிவாக விசாரித்து, அதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்று கூறி புகாரை தலைமைச் செயலாளர் முடித்து வைத்து விட்டார்” என்று கூறினார். இதையடுத்து, இந்த வழக்குகளுக்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 5 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story