மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற பல்கலைக்கழகங்கள் மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்படுகிறதா? ஐகோர்ட்டு கேள்வி


மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற பல்கலைக்கழகங்கள் மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்படுகிறதா? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 16 Feb 2021 4:08 AM GMT (Updated: 16 Feb 2021 4:08 AM GMT)

நிதியுதவி அளிக்கும் படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி தமிழக பல்கலைக்கழகங்கள் மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்படுகிறதா? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

இடஒதுக்கீடு பிரச்சினையின் காரணமாக எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மாணவி சித்ரா உள்பட பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை, நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து வருகிறார். விசாரணையின்போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த செயலுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். சர்வ சாதாரணமாக 2 மேற்படிப்புகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது என்று கருத்தும் தெரிவித்து இருந்தார்.

உதவி செய்ய தயார்

இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) சார்பில் ஆஜரான மத்திய அரசின் மூத்த வக்கீல் ரபுமனோகர், “2 படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை டிசம்பர் 31-ந் தேதிக்குள் முடித்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இருந்தாலும், இந்த படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க அனுமதி கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பினால், அதன்படி மாணவர்கள் சேர்க்கைக்கு ஏ.ஐ.சி.டி.இ., எல்லா உதவிகளையும் செய்யும். அதேநேரம், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 45 இடங்களுக்கு மட்டுமே மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்படுமே தவிர, புதிதாக 9 இடங்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு இல்லை” என்று வாதிட்டார்.

கல்வி உதவித்தொகை

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “இந்த 2 படிப்புகளுக்கும் மத்திய அரசு முழு நிதி உதவியை வழங்குகிறது. இதுபோல மத்திய அரசின் நிதியுதவியை பெற்று நடத்தப்படும் படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டைத்தான் தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் பின்பற்றுக்கின்றன. ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் மாணவர்களை சேர்க்காமல் நிறுத்தி வைத்துள்ளது” என்று வாதிட்டார்.

இதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் ஏ.சரவணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “2 படிப்புகளுக்கும் ஆகும் செலவுகள், ஆசிரியர்களின் ஊதியம் ஆகியவற்றை பல்கலைக்கழகம் தான் வழங்குகிறது. மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலான கல்வி உதவித்தொகையை மட்டும்தான் மத்திய அரசு வழங்குகிறது. உதவித்தொகை வழங்குவதால், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ய முடியாது” என்றார்.

மறைமுக நிர்ப்பந்தமா?

மத்திய அரசு தரப்பில் தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி பி.புகழேந்தி, “பல பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் நலன் கருதி புதிய படிப்புகளை உருவாக்கி வரும்போது, அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் 25 ஆண்டுகளாக நடத்தி வந்த படிப்பை நிறுத்தியுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) விதிகளில் மாநில இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று பல்கலைக்கழகங்களை மத்திய அரசு மறைமுகமாக நிர்ப்பந்தம் செய்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய அரசு வக்கீல், அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று பதில் அளித்தார்.

குழப்பத்துக்கு காரணம்

இதையடுத்து நீதிபதி, “எந்த இடஒதுக்கீட்டை பின்பற்றுவது? என்று தமிழக அரசிற்கு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியது ஏன்? அனைத்து குழப்பங்களுக்கும் இதுதான் காரணம்” என்று கருத்து கூறினார். பின்னர், “2 எம்.டெக். படிப்புகளுக்கும் மாணவர்களை சேர்க்க அனுமதி வேண்டும் என்று ஏ.ஐ.சி.டி.இ.க்கு, அண்ணா பல்கலைக்கழகம் உடனே கடிதம் எழுத வேண்டும். அந்த கடிதத்தின் அடிப்படையில், ஏ.ஐ.சி.டி.இ., தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இந்த 2 படிப்புகளுக்கும் மாணவர்களை சேர்க்கும் விவகாரத்தில் தெளிவான விளக்கத்துடன் மத்திய அரசு வரவேண்டும். இந்த வழக்கில் யு.ஜி.சி.யை எதிர் மனுதாரராக சேர்க்கிறேன். அதேநேரம் தற்போது நிறுத்தப்பட்ட 2 எம்.டெக்., படிப்புகள் மூலம் இதுவரை எத்தனை நிபுணர்கள் உருவாகியுள்ளனர்? என்பது குறித்து ஆய்வு செய்ய மனுதாரர் தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறி, இன்று (செவ்வாய்க்கிழமை) வழக்கை மீண்டும் விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

Next Story