மகனுக்கு காதணி விழா: 108 கிடா வெட்டி விருந்து வைத்த சீமான்


மகனுக்கு காதணி விழா: 108 கிடா வெட்டி விருந்து வைத்த சீமான்
x
தினத்தந்தி 16 Feb 2021 4:18 AM GMT (Updated: 16 Feb 2021 4:18 AM GMT)

மகனின் காதணி விழாவுக்காக கோவிலில் 108 கிடாய் வெட்டி சீமான் விருந்து வைத்தார்.

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடிக்கரை கிராமத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் நாம் தமிழர் கட்சி் ஒருங்கிணைப்பாளர் சீமான் மகன் பிரபாகரனுக்கு காதணி விழா நடந்தது.

அப்போது சீமான் கூறியதாவது:-

எனதுமகன் காதணி விழாவிற்காகவும் குலதெய்வ வழிபாட்டிற்காகவும் இங்கு வந்தோம். 108 கிடா வெட்டி விருந்து வைத்து விழா நடத்தி மகிழ்ச்சியோடு நிற்கிறேன்.

விவசாயிகள் கடனாளி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெல் வாங்கி விற்பவனும் தவிடாக்கியவனும் கூட பணகாரர்களாக ஆகி இருக்கிறார்கள். விளைவித்தவன் கடனாளி ஆக காரணம் என்ன?. ஒவ்வொரு முறையும் விவசாய கடனை தள்ளுபடி செய்தாலும் விவசாயி கடனாளியாகவே ஆகிறான். அடிப்படையில் பிரச்சினை இருக்கிறது. உழவன் உற்பத்தி செய்த பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாத நிலையை மாற்றவேண்டும்.

ஏமாற்று வேலை

மத்திய அரசு செய்வதெல்லாம் ஒரு ஏமாற்று வேலை. தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் வெற்றி நடைபோடும். பெட்ரோல், டீசல் விலை குறித்து சுப்பிரமணியசாமி சொன்னதுபோல ராவணன் நாடு, சீதா நாடுகளில் எல்லாம் விலை குறைவா இருக்கு. ராமன் நாட்டில் விலை ரொம்ப கூடுதலாக இருக்கிறது. எல்லாம் தனியார்மயம் ஆக்கியதால் அவர்களுக்கு நினைத்த நேரம் விலையேற்றுவது வாடிக்கையாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story