சட்டவிரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதில் பின்வாங்க மாட்டேன் மு.க.ஸ்டாலின் பேச்சு


சட்டவிரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதில் பின்வாங்க மாட்டேன் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 18 Feb 2021 4:34 AM GMT (Updated: 18 Feb 2021 4:34 AM GMT)

தி.மு.க. ஆட்சி மக்களாட்சியாக அமையும் என்றும், சட்டவிரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதில் எப்போதும் பின்வாங்கமாட்டேன் என்றும் மதுரையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் 4-ம் கட்டமாக “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியை நேற்று தொடங்கினார். மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக கொண்டார்.

தொடர்ந்து மக்களிடம் நேரிலும் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசினார்.

எய்ம்ஸ் மருத்துவமனை

நிகழ்ச்சியில் நிறைவாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரவேண்டும் என்று கருணாநிதி விரும்பினார். அவர் வாழ்ந்த காலத்தில் அந்த ஆசையை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. இன்னும் 3 மாதங்களில் கருணாநிதியின் அந்த ஆசையும் நிறைவேறத்தான் போகிறது. மதுரை மண்ணுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்தது தி.மு.க. ஆட்சிதான். மதுரையை வளப்படுத்திய அரசுதான் தி.மு.க. அரசு. கருணாநிதியின் அரசு. அடுத்து அமைய இருக்கும் ஆட்சியில் இதுபோல ஏராளமான திட்டங்களைக கொண்டு வர இருக்கும் அரசு தான் நம்முடைய தி.மு.க. அரசு. இப்படி எதையாவது அ.தி.மு.க.வால் சொல்ல முடியுமா? எய்ம்ஸ் மருத்துவமனையையாவது கொண்டு வந்துவிடுவார்கள் என்று நினைத்தேன். அதிலும் ஏமாற்றம்தான் கிடைத்தது. எதுவும் நடக்கவில்லை. அதற்கான எந்த ஏற்பாடும் இல்லை.

ரூ.12 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். இதுதொடர்பாக நமது நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு, மத்திய மந்திரி கொடுத்த பதிலில், ஆந்திராவுக்கு ரூ.782 கோடி, மராட்டியத்துக்கு ரூ.932 கோடி, மேற்கு வங்காளத்துக்கு ரூ.882 கோடி, உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.702 கோடி, பஞ்சாப்புக்கு ரூ.597 கோடி, அசாமுக்கு ரூ.341 கோடி, இமாசலபிரதேசத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கி இருக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு மொத்தமே ரூ.12 கோடி தான் ஒதுக்கி இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? தமிழகத்தில்தான் பா.ஜ.க.வோ, அதன் கூட்டணியோ ஜெயிக்கப் போவதில்லை, பிறகு எதற்காக பணம் ஒதுக்கவேண்டும் என்று பிரதமர் நினைக்கிறாரா? மதுரை என்பது இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? ஜப்பான் நாடு நிதி தர மறுத்தாலோ, தாமதம் செய்தாலோ மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வராதா? ஒரே ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு- அந்த திட்டத்தையும் 7 ஆண்டுகளாக பா.ஜ.க. பம்மாத்து காட்டிக்கொண்டு இருக்கிறது வேதனைக்குரியது.

‘ஸ்மார்ட்’டாக ஊழல்

மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் மூலமாக வந்த பணத்தை மொத்தமாக கபளீகரம் செய்துள்ளார்கள். ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டம் என்பது 'ஸ்மார்ட்'டாக ஊழல் செய்யும் திட்டமாக மாறிவிட்டது. இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூவும், ஆர்.பி. உதயகுமாரும் உடந்தையாக இருக்கிறார்கள். அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி. உதயகுமாரும் ஒட்டுமொத்தமாக மதுரையைப் பாழாக்கியவர்கள். ஆற்றுத் தண்ணீரை தெர்மகோல் கொண்டு மூடியது முதல் நமக்கெல்லாம் கொரோனா வராது என்று பொய் சொன்னது வரை முழுக்க முழுக்க ‘காமெடி சேனல்' நடத்திக் கொண்டு இருக்கிறார் செல்லூர் ராஜூ.

மதுரையை ரோம், சிட்னி நகரங்களைப் போல ஆக்கப் போவதாகச் சொன்னார் செல்லூர் ராஜூ. சிங்கப்பூர் ஆக்கப்போகிறேன் என்றார் ஆர்.பி.உதயகுமார். தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் அங்கு போய் தலைமறைவு ஆகலாமே தவிர, மதுரையை மாற்ற முடியாது. தி.மு.க. ஆட்சி, மக்களாட்சியாக அமையும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிம்மதி தரும் ஆட்சியாக அமையும். சட்டம்-ஒழுங்கு காப்பாற்றப்படும். சட்டவிரோதச் செயல்பாடுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம். அதில் நம்பிக்கையோடு இருங்கள். அதில் நான் எப்போதும் பின்வாங்க மாட்டேன். அமைதியான வாழ்வுக்கான உத்தரவாதத்தை இந்த மதுரை மண்ணில் இருந்து தமிழக மக்களுக்கு வழங்குகிறேன். தி.மு.க. ஆட்சி மலரும். மக்கள் கவலைகள் யாவும் தீரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருணாநிதி சிலை திறப்பு

முன்னதாக, மதுரை சிம்மக்கல்லில் கருணாநிதியின் உருவச்சிலையைத் திறந்துவைத்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘இன்னும் 3 மாதங்களில் கருணாநிதியுடைய கனவு தமிழகத்தில் நிறைவேறப்போகிறது. நிறைவேறுவதற்கு அவருடைய சிலையின் கீழ் நின்று நாம் அத்தனை பேரும் உறுதி எடுப்போம். சபதம் ஏற்போம்’’ என்றார்.

Next Story