கோரிக்கைகளை வலியுறுத்தி ‘உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது’; ஐகோர்ட்டு தீர்ப்பு


கோரிக்கைகளை வலியுறுத்தி ‘உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது’; ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 19 Feb 2021 1:52 AM GMT (Updated: 19 Feb 2021 1:52 AM GMT)

இலங்கை தமிழரான சந்திரகுமார், பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் உள்ளார். இவர் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை உண்ணாவிரதம் இருந்தார்.

இதையடுத்து அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கை பூந்தமல்லி போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கை புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகையையும் போலீசார், சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சந்திரகுமார், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளார். அதில், "கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது. இந்திய தண்டனை சட்டம் 309-ன் கீழ் (தற்கொலை முயற்சி) மனுதாரர் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றத்துக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை தான். எனவே, இந்த குற்றப்பத்திரிகையை ஓர் ஆண்டுக்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பூந்தமல்லி கோர்ட்டு, 3 ஆண்டுகளுக்கு பின்னர், எந்த ஒரு காரணமும் கூறாமல், குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால், எந்த பயனும் இல்லை. வழக்கை ரத்து செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Next Story