பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய – மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் -நிர்மலா சீதாராமன்


பெட்ரோல், டீசல்  விலை உயர்வு: மத்திய – மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் -நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 20 Feb 2021 12:04 PM GMT (Updated: 20 Feb 2021 1:42 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒரு சிக்கலான பிரச்சினை, மத்திய – மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னை

கடந்த 10 நாட்களில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது; சில நகரங்களில், பெட்ரோல் ஏற்கனவே லிட்டருக்கு ₹ 100 ஐ தாண்டியுள்ளது. சனிக்கிழமையன்று, பெட்ரோல் விலை மீண்டும் 39 பைசா உயர்ந்து தேசிய தலைநகரான டெல்லியில் லிட்டருக்கு ரூ. 90  என்ற  விலையை எட்டியது.  டீசல் 37 பைசா உயர்வுக்குப் பிறகு லிட்டருக்கு. 80.97 க்கு விற்கப்படுகிறது.

மும்பையில், பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ. 97 ஆகவும், டீசல் லிட்டருக்கு .ரூ. 88.06 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் மத்திய பட்ஜெட்  தொடர்பான சந்தேகங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது, கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளபோது பெட்ரோல் விலை உயர்வு ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோலிய பொருட்களின் விலையை தீர்மானிப்பதாகவும், விலை உயர்வில் மத்திய அரசுக்கு பங்கில்லை. 

பெட்ரோல், டீசல்  விலை உயர்வு ஒரு சிக்கலான பிரச்சினை, விலையைக் குறைக்க மத்திய – மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

Next Story