ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2021 7:37 PM GMT (Updated: 20 Feb 2021 7:37 PM GMT)

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை ஆர்.கே.நகரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பேசுகிறார்கள்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து, தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த, ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 24, 28-ந் தேதிகளிலும், மார்ச் 1 மற்றும் 2-ந் தேதிகளிலும் என மொத்தம் 4 நாட்கள் அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும்; கட்சி அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா ஆகிய பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படுகிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

உருவச்சிலைக்கு மரியாதை
மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினருடன் தொடர்புகொண்டு, ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கட்சி தலைமையால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற 24-ந் தேதி ஆங்காங்கே ஜெயலலிதாவினுடைய உருவச்சிலைக்கு அல்லது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தற்காப்பு நடவடிக்கை
அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள் மற்றும் இன்னபிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறும் வகையில், அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

24-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பேசுகிறார்கள்.

Next Story