"தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்


தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
x

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராமாபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா ஆரம்பத்தில் இருந்ததை விட படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு குறைந்துவிட்டது. ஆனாலும் 500-க்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு அதன் பிறகு இன்னும் படிப்படியாக குறையாமல் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

சென்னையில் ஒரு சிலர் முககவசம் அணிகின்றனர். ஆனால் தென் மாவட்டங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் முககவசம் அணிவதை விட்டுவிட்டனர். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கூட மாஸ்க் அணியாமல் செல்வது தற்போது அதிகரித்து வருகிறது.

கொரோனா இனி நமக்கு வராது என்ற நினைப்பில் பலர் கவனக்குறைவாக உள்ளனர். அது தவறு. தற்போது தேர்தல் காலமாக உள்ளதால் பல நிகழ்ச்சிகள் கூட்டம், கூட்டமாக நடத்தப்படுகிறது. யாருமே முககவசம் அணிவது இல்லை. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முககவசம் அணிய வேண்டும். மக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உருமாறிய கொரோனா தமிழகத்தில் உள்ளதா, இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் இதை தடுப்பதற்காக கண்காணிப்பு தீவிர மாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே வழிமுறைகள் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி கண்டிப்பாக முகக்கவசத்தை மீண்டும் அனைவரும் அணிய வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி 16 லட்சத்து 70 ஆயிரத்து 470 டோஸ்கள் கைவசம் உள்ளன. இதில் கோவிஷீல்டு 14 லட்சத்து 80 ஆயிரத்து 500 டோஸ் மருந்துகளும், 1 லட்சத்து 89 ஆயிரத்து 920 கோவேக்சின் மருந்துகளும் உள்ளன. இதில் சுகாதார பணியாளர்கள் 2 லட்சத்து 96 ஆயிரத்து 155 பேரும், வருவாய்துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் 43 ஆயிரத்து 876 பேரும், 30 ஆயிரத்து 581 போலீசாரும் ஆக மொத்தம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 612 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

பதிவு செய்தவர்களில் 55 சதவீதம் பேர்தான் தடுப்பூசி போட்டுள்ளனர். மற்றவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். எதற்காக தயங்குகிறார்கள் என்று புரிய வில்லை. கொரோனா வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் பலர் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 500 பேருக்கு என்ற நிலை உள்ளது. எனவே மீண்டும் கொரோனா பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் முககவசம் அணியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story