பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து - தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து - தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 3:26 AM GMT (Updated: 23 Feb 2021 3:26 AM GMT)

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை, 

வரலாறு காணாத பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டும் காணாமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி, பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், சென்னை சின்னமலை, வேளச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். இதில் தென்சென்னை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பூங்கோதை ஆலடி அருணா, வாகை சந்திரசேகர், புகழேந்தி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமையல் செய்யும் படத்தை சிலிண்டரில் ஒட்டியும், கியாஸ் சிலிண்டர்களை திரும்ப ஒப்படைப்போம் என்ற வாசகத்தை எழுதியும் தலையில் சுமந்தபடி நூதன முறையில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:-

ஒரு இயக்கத்தின் ஆட்சி காலம் முடிந்து விட்டது என்பதற்கு அடையாளமாக வரும் செய்திகளில் ஒன்று விலைவாசி ஏற்றம். பெட்ரோல், டீசல் விலை ஏறி இருக்கிறது. அது தொடர்பான பொருட்கள் விலை ஏறி இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை கண்ணுக்கு தெரிந்து விலையேறும். இதனால், போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதால், கடைகளில் மளிகை பொருட்கள் தானாக விலையேறி விடும். இத்தகைய மறைமுக விலையேற்றத்தையும், கண்ணுக்கு தெரிந்த விலையேற்றத்தையும் சமாளிப்பது என்பது ஒரு ஆட்சிக்கு பெரிய வேலை.

மத்தியில் இருக்கும் ஆட்சி இதைப்பற்றி கவலைப்படாது. காரணம், அவர்கள் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறார்கள். அவர்கள் தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் 4 ஆண்டுகாலம் இருக்கிறது. எனவே, அதுவரை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், மக்களோடு தொடர்பில் இருப்பவர்கள் மாநில அரசு. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து இங்கு இருக்கும் முதல்-அமைச்சர் கண்டித்து இருக்க வேண்டும். கண்டிக்க தைரியம் இல்லாவிட்டால், டெல்லிக்கு போய் காலிலாவது விழுந்து கேட்டு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதே போன்று சென்னை மேற்கு, தென்மேற்கு மாவட்ட சார்பாக மாவட்ட பொறுப்பாளர்கள் சிற்றரசு, மயிலை த.வேலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதிமாறன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மோகன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் மு.க.தமிழரசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றி வந்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை ராஜாஜி சாலை இந்தியன் வங்கி அருகே சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா முன்னிலை வகித்தார். இதில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ரங்கநாதன், ரவிச்சந்திரன், ஆர்.டி.சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தாம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, இதயவர்மன், வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆவடி மாநகராட்சி அருகே திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சா.மு.நாசர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூரில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி., மாநில மீனவர் அணி செயலாளர் பத்மநாபன், பகுதி செயலாளர்கள் கே.பி.சங்கர், தி.மு.தனியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story