19 செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் 28-ந்தேதி விண்ணில் பாய்கிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்


19 செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் 28-ந்தேதி விண்ணில் பாய்கிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
x
தினத்தந்தி 23 Feb 2021 5:27 AM GMT (Updated: 23 Feb 2021 5:27 AM GMT)

19 செயற்கைகோள்களை பொருத்தி பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வருகிற 28-ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.

சென்னை,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைகோள்களை வணிக ரீதியிலும் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு எதிர்பார்த்தப்படி இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தடங்கல்கள் ஏற்பட்டு வந்தது.

ஆனால் தற்போது பல்வேறு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இஸ்ரோ தன்னுடைய பணியில் முழுவீச்சில் இறங்கி உள்ளது. அந்தவகையில் நடப்பாண்டுக்கான முதல் ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. சி-51-வது ராக்கெட்டை வருகிற 28-ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஒன்றாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.24 மணிக்கு, வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில், ஏவப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த அமசோனியா-1 என்ற செயற்கைகோள் முதன்மை செயற்கை கோளாகும். இவற்றுடன், இந்தியாவை சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யுனிட்டி சாட் தொகுப்பை சேர்ந்த ஜெ.ஐ.டி. சாட், ஜி.எச்.ஆர்.சி.இ. சாட், ஸ்ரீசக்தி சாட் ஆகிய 3 செயற்கைகோள்களுடன் ஸ்பேஸ் கிட்ஸ் செயற்கைகோளான சதீஷ்தவான் சாட் உள்ளிட்ட 4 செயற்கை கோள்கள் மற்றும் இந்திய விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் நியு ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைகோள் உள்பட 19 செயற்கைகோள்கள் பூமியில் இருந்து 752 கிலோ மீட்டர் தூரத்தில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன.

அமசோனியா-1 பூமி கண்காணிப்பு செயற்கைகோளாகும். இந்த செயற்கைகோள் அமேசான் பிராந்தியத்தில் காடுகள் அழிப்பைக் கண்காணிப்பதற்கும், பிரேசிலிய நாட்டு பிரதேசத்தில் பன்முகப்படுத்தப்பட்ட விவசாயத்தை பகுப்பாய்வு செய்வதற்கும், பயனாளிகளுக்கு தொலை உணர்வு தரவுகளை வழங்குவதன் மூலம் தற்போது இருக்கும் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த இந்த செயற்கைகோள் உதவும்.

தற்போது விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 53-வது ராக்கெட்டாகும். மத்திய அரசின் இந்திய விண்வெளித்துறையின் கீழ் செயல்படும் நியுஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான முதல் வணிக ராக்கெட்டாகும். இந்த ராக்கெட் இன்று (நேற்று) விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ராக்கெட் வடிவமைப்பதில் சற்று காலதாமதம் ஆனதால் வருகிற 28-ந்தேதி ஏவப்படுகிறது. இதற்கான இறுதி கட்டப்பணியான சுமார் 25 மணி நேர கவுண்ட்டவுன் வருகிற 27-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிறுவனம் விண்வெளித்துறையில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள ஸ்பேஸ் பிலைட் இன்க் என்ற நிறுவனத்துடன் இணைந்து வணிக ஏற்பாட்டின் கீழ் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Next Story