இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பன்னீர்செல்வம்


இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 23 Feb 2021 6:18 AM GMT (Updated: 23 Feb 2021 6:22 AM GMT)

தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

சென்னை,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கடந்த 5-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த நிலையில், கூட்டம் நிறைவடைந்தது. 

இதனை தொடர்ந்து, 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது. இதில் துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 10-வது பட்ஜெட் இதுவாகும். இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய அவர், தமிழக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நல்லாளுமை விருதை பெற்றுள்ளது. தமிழகத்தை நாடிலேயே தலைசிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். 

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காக ரங்கராஜன் குழுவின் 413 பரிந்துரைகளில் 273 பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த அறிக்கையை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். 

* காவல்துறை சட்டம்-ஒழுங்கு வரவு, செலவு திட்டத்திற்கு ரூ.9,567 கோடி ஒதுக்கீடு

* வேளாண்மைத்துறைக்கு 1,738 கோடி

* நீர்வள ஆதாரத்துறைக்கு ரூ.6453 கோடி 

* மீன்வளத்துறை ரூ.580 கோடி

* நீதித்துறை நிர்வாகத்திற்கு ரூ.1,437 கோடி

* தீயணைப்பு துறைக்கு ரூ.436 கோடி 

* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,700 கோடி

* நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி

* உயர்கல்வித்துறைக்கு ரூ.5,478 கோடி ஒதுக்கீடு

மேலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிணி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று ம் அவர் தெரிவித்துள்ளார். நல் ஆளுமை குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். கொரோனா காலத்திலும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளதாகவும், கொரோனா தாக்கம் வரவு, செலவு திட்டத்தில் எதிரொலித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story