சொல்வதை செய்கிறேன்: ‘‘நான் மந்திரவாதி அல்ல; செயல்வாதி’’ - மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்


சொல்வதை செய்கிறேன்: ‘‘நான் மந்திரவாதி அல்ல; செயல்வாதி’’ - மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
x
தினத்தந்தி 23 Feb 2021 6:23 AM GMT (Updated: 23 Feb 2021 6:23 AM GMT)

நான் மந்திரவாதி அல்ல; செயல்வாதி என்றும், சொல்வதை செய்கிறேன் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டம், ஆத்தூரில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. மகளிரணி கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011 சட்டமன்றத் தேர்தலின்போது, இரவு, பகல் பாராமல் பணியாற்றும் பெண்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். அதன்படி, அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வழங்கிய ஒரே தலைவி ஜெயலலிதா.

தி.மு.க.வில் இவ்வாறு பெண்களின் சிரமங்களை நினைத்துப் பார்த்தார்களா? பெண்களின் சுமைகளைக் குறைப்பதற்கு திட்டங்கள் ஏதேனும் கொண்டு வந்தார்களா?. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட திட்டம் கொண்டு வரப்படவில்லை. இதுபோன்ற காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை கொண்டு வந்து ஜெயலலிதா அனைத்து பெண்களின் மனதிலும் நிலைத்து நிற்கிறார். அ.தி.மு.க. அரசும் அதே வழியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. நான் அறிவித்த திட்டத்தையும் சட்டமன்றத்தில் நீங்கள் தெரிந்துகொள்ளவில்லை. பத்திரிகையிலும் பார்க்கவில்லை. அரசாங்கம் என்னென்ன திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற விவரமும் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.

நான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சட்டப்பேரவை விதி எண்110-ன் கீழ் வீட்டில் இருந்தபடியே உங்கள் குறைகளைத் தெரிவிக்க முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்க்கும் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அற்புதமான அறிவிப்பைக் கொடுத்தோம். இதற்காக உதவி மையம் எண் 1100 கொடுத்து உங்கள் குறைகளை தெரிவித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரி உங்களை நாடி உங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார். மனு போடும் வேலையுமில்லை.

ஆகவே மு.க.ஸ்டாலின் மனுவை காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார், அதுவும் முடியாது. இப்பொழுதுதான் எடப்பாடி பழனிசாமி புத்தி வந்து இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார் என்றும் சொல்கிறார். இப்போது வரவில்லை மு.க.ஸ்டாலின் அவர்களே, நீங்கள் ஊர் ஊராகச் சென்று, திண்ணையில் பெட்சீட் போட்டு மனு வாங்கியதற்கு முன்பாகவே நான் சட்டமன்றத்தில் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே அறிவித்துவிட்டேன். 5 நாட்களுக்கு முன்பு நான் தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டேன்.

இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 1100 வழியாக தங்கள் குறைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. இந்த விஞ்ஞான உலகத்தில், உங்கள் அலைபேசி வாயிலாக 1100 எண்ணை தொடர்பு கொண்டு எந்தப் புகாரையும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதிவு செய்யும்போது, அது அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்து தீர்த்து வைக்கப்படும்.

மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகின்றார், ‘‘எடப்பாடி பழனிசாமி மந்திரவாதியா என்று’’, நான் ஒன்றும் மந்திரவாதி அல்ல. செயல்வாதி. சொல்லுகின்றதை செய்கின்ற செயல்வாதியாக இருக்கின்றேன்.

வருகின்ற சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமானது, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நாம் சந்திக்கின்ற முதல் தேர்தல். இந்த தேர்தலில் தான் இந்தியாவிலேயே முதன் முறையாக அ.தி.மு.க.வில் தான் பெண்களைக்கொண்ட பூத் குழு அமைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும், எந்த கட்சியிலும் கிடையாது. பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற கட்சி அ.தி.மு.க. ஒவ்வொரு பூத்திற்கு பெண்கள் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் அரசாங்கம் போடுகின்ற திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

மு.க.ஸ்டாலின், 3 மாதம் கழித்து முதல்-அமைச்சர் ஆகி விடுவாராம், முதல் கையெழுத்து போடுகிறாராம். தேர்தலே அறிவிக்கவில்லை, வேட்பாளர்கள் களம் காணவில்லை, வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை அதற்குள் எப்படி இவர் முதல்-அமைச்சர் ஆவார். எப்படி வேகமாக இருக்கிறார் பாருங்கள். இது வேகம் அல்ல, 10 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் கோரப்பசியில் இருக்கின்றார்.

நம்முடைய சகோதரிகள் கவனமாக இருக்க வேண்டும். தி.மு.க.வினர் தில்லு முல்லு செய்து வெற்றிபெற முயற்சிக்கின்றார்கள். அவர்களின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்து, அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் தொடர கட்சி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வெற்றியைத் தேடித்தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story