அஞ்சலி பட நடிகைக்கு செல்போனில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் - பீட்சா டெலிவரி செய்த ஊழியருக்கு வலைவீச்சு


அஞ்சலி பட நடிகைக்கு செல்போனில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் - பீட்சா டெலிவரி செய்த ஊழியருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Feb 2021 4:21 AM GMT (Updated: 24 Feb 2021 4:21 AM GMT)

அஞ்சலி படத்தில் நடித்த நடிகைக்கு செல்போனில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பீட்சா டெலிவரி செய்த ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை,

மணிரத்னம் டைரக் ஷனில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஞ்சலி படத்தில் நடித்தவர் காயத்ரி சாய்நாத். அந்த படத்திற்கு பிறகு அவர் சினிமாவில் தலை காட்டவில்லை. அவர் சென்னை தேனாம்பேட்டை சீதாம்மாள் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் ஆன்லைன் மூலம் பீட்சா ஆர்டர் செய்தார். பீட்சா டெலிவரி செய்த ஊழியர் தாமதமாக வந்துள்ளார். அவரை நடிகை காயத்ரி கண்டித்துள்ளார். இதனால் பீட்சா டெலிவரி ஊழியர் ஆத்திரமடைந்து காயத்ரியை பழிவாங்க நினைத்தார்.

நடிகை காயத்ரியின் செல்போன் நம்பர் பீட்சா டெலிவரி செய்த ஊழியரிடம் இருந்தது. அந்த நம்பரை வைத்து பீட்சா டெலிவரி ஊழியர் காயத்ரிக்கு செல்போனில் அடிக்கடி பேசி விளையாட ஆரம்பித்துள்ளார். ஆபாசமாக பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த ஆபாச செல்போன் பேச்சு எல்லை மீறி போனது.

வாட்ஸ்-அப்பிலும் அவரை ஆபாசமாக சித்தரித்து தகவல் வெளியானது. மேலும் வேறுசில எண்களில் இருந்தும் ஆபாச மெசேஜ்கள் வந்துள்ளன. இரவு-பகல் பாராமல் இது போன்ற மிரட்டல் மற்றும் அவதூறு தொல்லை தொடர்ந்துள்ளது. இதனால் கொதித்து போன காயத்ரி, இது குறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

தேனாம்பேட்டை உதவி கமிஷனர் தேவராஜ் மேற்பார்வையில் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில் பீட்சா டெலிவரி ஊழியர் மட்டும் அல்லாது அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து இந்த விபரீத விளையாட்டை நடத்தியது தெரிய வந்தது.

பீட்சா டெலிவரி ஊழியர் பெயர் பரமேஸ்வரன். தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் சிவகிரி சென்றனர். ஆனால் பரமேஸ்வரன் போலீஸ் கையில் மாட்டவில்லை. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story