ஜெயலலிதா பிறந்தநாளில் தி.மு.க.வை தலையெடுக்கவிடாமல் உறுதிமொழி ஏற்போம் தொண்டர்களுக்கு, டி.டி.வி.தினகரன் அழைப்பு


ஜெயலலிதா பிறந்தநாளில் தி.மு.க.வை தலையெடுக்கவிடாமல் உறுதிமொழி ஏற்போம் தொண்டர்களுக்கு, டி.டி.வி.தினகரன் அழைப்பு
x
தினத்தந்தி 24 Feb 2021 5:56 AM GMT (Updated: 24 Feb 2021 5:56 AM GMT)

தி.மு.க.வை தலையெடுக்கவிடாமல் செய்து, புதிய விடியலை ஏற்படுத்திட உறுதி ஏற்றிடுவோம் என்று தொண்டர்களை டி.டி.வி.தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

நம்முடைய இதயத்தைவிட்டு அகலாமல் நம்மை வழி நடத்தி கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் எப்போதுமே நமக்கு சிறந்த நாள். எம்.ஜி.ஆர். பாதையில், ஜெயலலிதா கற்றுத்தந்த துணிவோடு, அவரின் லட்சியங்களை வென்றெடுத்திட உழைக்கிற நாம், ஒவ்வொரு ஆண்டும் அவரின் பிறந்தநாளை உணர்வுப்பூர்வமாக கொண்டாடி வருகிறோம்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளில், சசிகலாவின் வாழ்த்துகளோடு தி.மு.க. எனும் தீய சக்தி கூட்டத்தை தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்க விடக்கூடாது என்ற கடமையும் நம் கைகளில் இருக்கிறது. அதனை நிறைவேற்றுவதே, தமிழ்நாட்டு ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.

10 ஆண்டுகளாக பதவியில் இல்லாமல் மக்களின் மீது பாய்வதற்கு தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் எதையெல்லாம் அபகரிப்பார்கள், என்னென்ன அட்டூழியங்களை அரங்கேற்றுவார்கள், வணிகர்கள் மற்றும் சாதாரண மக்களின் நிம்மதி எப்படியெல்லாம் குலைந்து போகும் என்பதை யோசித்து பார்த்தால் நமக்கு முன்பு இருக்கும் கடமையின் முக்கியத்துவம் புரிந்துவிடும். தமிழகத்திற்காக, தமிழக மக்களின் நலன்களுக்காக இந்த கடமையை சரியாக செய்து முடிக்க ஜெயலலிதாவின் பிறந்தநாளில் உறுதி ஏற்றிடுவோம்.

பணத்தை மட்டும் வைத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.

சோதனை நெருப்பாறுகளை கடந்து, ஜெயலலிதா வளர்த்த சிங்கக்குட்டிகளாக நெஞ்சு நிமிர்த்தி பயணித்து, வருகிற தேர்தல் களத்தில் புதிய வெற்றிகளை பெற்று அதனை ஜெயலலிதாவின் நினைவுகளுக்கு அர்ப்பணிப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story