பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்- தமிழக அரசு


பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்- தமிழக அரசு
x
தினத்தந்தி 24 Feb 2021 1:37 PM GMT (Updated: 24 Feb 2021 1:37 PM GMT)

பாலியல் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

முதல்வர் பழனிசாமி, கடந்த 21-ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அவரது பாதுகாப்புக்கு பணியின்போது பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்றதாக உயர் போலீஸ் அதிகாரியான சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

திமுக தலைவர் ஸ்டாலின், 'பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலையை பார்த்து அத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் தலைகுனிய வேண்டும். டிஜிபி ராஜேஸ் தாஸை சஸ்பெண்ட் செய்து கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,' என வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து,  சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகார் குறித்து  விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணைக் குழு அமைத்தது. கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவில் சீமா அகர்வால், ஐ.ஜி அருண், டிஐஜி சாமூண்டிஸ்வரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 

இந்த நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்  கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமலாக்கப் பிரிவு சிறப்பு டிஜிபி கரன் சின்ஹா, காவல் பயிற்சி கல்லூரி சிறப்பு டிஜிபியாக ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story