இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து; 9, 10, 11-ம் வகுப்புகளில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி; சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தினத்தந்தி 25 Feb 2021 10:38 PM GMT (Updated: 25 Feb 2021 10:38 PM GMT)

தமிழக சட்டசபையில் கடந்த 23-ந்தேதி 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

110 விதியின் கீழ் அறிவிப்பு
சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.கூட்டம் தொடங்கியவுடன் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவுபல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அ.தி.மு.க. அரசு, இந்த நோய்த்தொற்றில் இருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

நோய் எதிர்ப்பு மாத்திரைகள்
2020-2021-ம் கல்வி ஆண்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காகபள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ந்தேதி முதல், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.

பொதுத்தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி
இந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. மேலும், இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோரின் கோரிக்கையை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020-2021-ம் கல்வி ஆண்டில், 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு 
மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத்தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

26 லட்சம் மாணவர்கள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா பரவலை காரணம் காட்டி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தவிர்த்து, 11, 10 உள்பட எந்த வகுப்புக்கும் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறவில்லை. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்தநிலையில், கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் சமீபத்தில் பள்ளிகள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு தினமும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும் வரை, கல்வி தொலைக்காட்சி மூலம் ஆசிரியர்கள் நடத்திய பாடத்தையே வீட்டில் இருந்து கவனித்து வந்தனர்.

கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டபோது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தற்போது, 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பதன் மூலம் சுமார் 26 லட்சம் மாணவர்கள் பயன்பெற இருக்கின்றனர். ஏற்கனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 11-ம் வகுப்பில் 8 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களும், 10-ம் வகுப்பில் 9 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 9 லட்சம் மாணவர்களும் படித்து வருகின்றனர். தற்போது, இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story