9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு + "||" + 9th, 10th and 11th class students pass without examination: Government of Tamil Nadu
9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
சென்னை,
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் திறக்கப்பட்டன. குறிப்பாக பொதுத் தேர்வெழுதும் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்திலும், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை மாணவர்களும், பள்ளிகளும் அதிகம் எதிர்பார்த்திருந்தன.
இது குறித்த இறுதி முடிவை தமிழக முதல்வர்தான் எடுப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் கடந்த வாரம் கூறியிருந்தார். இது தொடர்பான ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்நிலையில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது குறித்த அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
2020-21ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தக் கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9,10,11-ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தி மதிப்பெண்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமலேயே ‘ஆல்பாஸ்’ என்பது மகிழ்ச்சி அளித்தாலும் மதிப்பெண் எப்படி கணக்கீடப்படும்? என மாணவர்களின் மனநிலையில் குழப்பம் நிலவி வருகிறது.