மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக மாநில தலைவர் முருகன் ஆலோசனை
தனியார் விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக மாநில தலைவர் முருகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் 6ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், கட்சிகளுடனான கூட்டணி, தேர்தல் பிரசாரம், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரமுடன் தொடங்கி உள்ளன. தற்போது அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக இறங்கி உள்ளன.
இந்த சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷா, விழுப்புரம் மற்றும் காரைக்காலில் தேர்தல் பரப்புரை மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை ஆகியவற்றை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக தமிழகம் வந்துள்ள அமித்ஷா சென்னையில் இருந்து காரைக்கால் புறப்பட உள்ளார்.
இந்நிலையில் தனியார் விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக மாநில தலைவர் முருகன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவருடன் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் குழு சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியநிலையில் இன்று அமித்ஷாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story