அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது


அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது
x
தினத்தந்தி 1 March 2021 1:47 AM GMT (Updated: 1 March 2021 1:47 AM GMT)

அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சியான அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையை நேற்று முன்தினம் முதல் அ.தி.மு.க. தொடங்கியது.

அமித்ஷாவுடன் சந்திப்பு

பா.ம.க.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அந்த கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க., தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி ஆகியோர் ஏற்கனவே சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் பா.ஜ.க. குழுவினர் நேற்று காலை சந்தித்து பேசினர்.

இதற்கிடையே, நேற்று இரவு காரைக்கால், விழுப்புரம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

எத்தனை தொகுதிகள்?

இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. தரப்பில் மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி, பா.ஜ.க. பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, அ.தி.மு.க-பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது.

இந்த ஆலோசனையில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. தரப்பில் 30 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகவும், அ.தி.மு.க. தரப்பில் 20 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி, கோவை, திருச்சி, வேலூர் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு ஆகலாம் என்று தெரிகிறது. பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

இழுபறியில் தே.மு.தி.க.

இதற்கிடையே அ.தி.மு.க-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்து பேசிய நிலையில், 2-ம் கட்ட பேச்சுவார்த்தை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நேற்று இரவு நடந்தது.

இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது தே.மு.தி.க. நிர்வாகிகள், பா.ம.க.வுக்கு நிகராக தங்களுக்கு தொகுதிகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அ.தி.மு.க-தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையும் சுமுக முடிவு எட்டப்படாமல் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

Next Story