பல லட்சம் பணத்துடன் திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள்


பல லட்சம் பணத்துடன் திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 1 March 2021 2:18 AM GMT (Updated: 1 March 2021 2:18 AM GMT)

திருப்பூரில் அதிகாலையில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பல லட்சம் பணத்துடன்ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர், 

திருப்பூரை அடுத்த கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆப் பரோடா வங்கியும், அதன் அருகில் ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஏ.டி.எம். மையத்தின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததுடன் ஏ.டி.எம். எந்திரமும் மாயமாகி இருந்தது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் வங்கிக்கு வந்த கொள்ளையர்கள் வங்கி ஏ.டி.எம். மையத்தின் கதவை உடைத்து, ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய், ஏ.டி.எம். மையத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஊத்துக்குளி சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கார் மூலம் இ்ழுத்து சென்றனர்

இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த 3 கண்காணிப்பு கேமராவில் இந்த கொள்ளை சம்பவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 3 கண்காணிப்பு கேமராவில் 2 கேமராக்கள் பழுதாகி இருப்பது தெரியவந்தது. இதனால் ஒரு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வங்கி ஏ.டி.எம். முன்பு கார் ஒன்று வந்து நிற்பதும், அதில் இருந்து முகமூடி அணிந்த 4 பேர் இறங்குவதும், அவர்களில் ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் ‘ஸ்பிரே’ அடிப்பதும் பதிவாகி உள்ளது. அதைத்தொடர்ந்து 4 பேரும் உள்ளே சென்று ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சிக்கிறார்கள்.

ஆனால் அவர்களால் ஏ.டிஎம். எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதையடுத்து எந்திரத்தையே அங்கிருந்து பெயர்த்து, கயிறு மூலம்ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே இழுத்து வருவதும், பின்னர் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கயிறு ஒன்றை கட்டி, அந்த கயிற்றை காரில் கட்டி இழுத்து சென்றதும் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

கார் சிக்கியது

மேலும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது கொள்ளையர்கள் வந்த கார் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே அனாதையாக நிற்பதை பார்த்தனர். உடனே அங்கு சென்று பார்த்தபோது காரில் யாரும் இல்லை. ஏ.டி.எம். எந்திரமும் அங்கு இல்லை.

போலீஸ் பிடியில் சிக்கி விடுவோம் என்று பயந்த கொள்ளையர்கள் காரை அங்கேயே விட்டு விட்டு காரில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை வேறு வாகனத்திற்கு மாற்றி கடத்தி சென்று உள்ளனர். அதையடுத்து அந்த காரை போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் எவ்வளவு பணம் இருந்தது என்று ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தபோது கடந்த 19-ந் தேதி ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.15 லட்சம் வைக்கப்பட்டதாகவும், சம்பவம் நடந்தபோது ஏ.டி.எம்.ல் சில லட்சம் வரை இருந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Next Story