தமிழகத்தில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்


தமிழகத்தில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 1 March 2021 3:12 AM GMT (Updated: 1 March 2021 3:12 AM GMT)

தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது.

சென்னை, 

தமிழத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என திட்டமிடப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட முன்பதிவு செய்திருந்தனர்.

இருந்தப்போதிலும் எதிர்பார்த்த அளவை விட தமிழகத்தில் மிக குறைந்தவர்களே தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் போலீசார் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்தது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 3-ந் தேதி முதல் முன்களப் பணியாளர்களும், பிப்ரவரி 8-ந் தேதி போலீசாரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்

தமிழகத்தில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நிலவரப்படி 4 லட்சத்து 57 ஆயிரத்து 951 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டங்களில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முறையாக மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்பதிவு செய்யாதவர்கள்

இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ‘பான் கார்டு’ உள்ளிட்டவைகள் கொண்டு ‘கோவின்’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story