நல்ல வளம் மிகுந்த தமிழ்நாட்டை நாளை அமைப்போம் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி


நல்ல வளம் மிகுந்த தமிழ்நாட்டை நாளை அமைப்போம் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி
x
தினத்தந்தி 1 March 2021 3:21 AM GMT (Updated: 1 March 2021 3:21 AM GMT)

நமக்கான நல்ல வளம் மிகுந்த தமிழ்நாட்டை நாளை அமைப்போம் என்றும், கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்கு காரணமான அரசாக தி.மு.க. அரசு அமையும் இதுவே தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (திங்கட்கிழமை) பிறந்தநாளாகும். இதையொட்டி அவரது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-

என் உயிரோடு கலந்து இருக்கும் கருணாநிதியின் தொண்டர்களுக்கு வணக்கம். மார்ச் 1-ந் தேதி எனது பிறந்தநாள். தமிழ் சமுதாயத்துக்காக என்னை நானே அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டு வருவதில், மேலும் ஒரு ஆண்டுக்குள் அடி எடுத்து வைக்கிறேன். எந்த ஒரு மனிதரின் பிறந்தநாளையும் அவர் கொண்டாடுவதை விட அடுத்தவங்க கொண்டாடுகிற அளவுக்கு வாழ வேண்டும் என்று சொன்னார் கருணாநிதி.

தி.மு.க.வே ஆதாரம்

அப்படித்தான் இந்த தமிழ் சமுதாயத்துக்காக 16 வயதில் இருந்து கடந்த 50 ஆண்டுகாலமாக என்னை நானே ஒப்படைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். பிறந்தநாள் என்பதை வெறும் கொண்டாட்டத்துக்கான நாளாக மட்டுமே நான் கருதுவது இல்லை. அது அடுத்தவங்களுக்கு பயன்பெறும் நாளாக அமைய வேண்டும் என்று நினைக்கிறவன் நான். நம்மை எல்லாம் ஆளாக்கிய அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொன்னார்.

இந்த வாழ்வியல் இலக்கணத்தை அரசியல் இலக்கணமாக கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம். கடந்த ஓராண்டு காலம் கொரோனா காலம். உலகத்தையே வைரஸ் அச்சுறுத்திய காலத்திலும், தொண்டர்கள் தான் வீதியில் நின்று மக்களின் வாழ்க்கையை காக்கவும் போராடினார்கள். தொண்டர்களோடு, தொண்டர்களாய் நானும் நின்றேன். பசிப்பிணி போக்கினோம். உணவை தயாரித்து கொடுத்தோம். இல்லாதவர்களுக்கு எல்லாம் கொடுத்தோம். வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு தி.மு.க.வே ஆதாரமாக இருந்தது.

ஆட்சி மாற்றம்

அந்த தொண்டின் தொடர்ச்சி இந்த பிறந்தநாள் விழாவின் போதும் தொடரட்டும். ஏழை எளிய மக்களுக்கு தேவையானதை கொடுங்கள். மாணவ-மாணவிகளுக்கு எழுது பொருட்கள், குறிப்பேடுகள் கொடுங்கள். இலவச மருத்துவ முகாம்களை நடத்துங்கள். ரத்ததானம் செய்யுங்கள். கண்தானம் செய்யுங்கள். இருப்பதை இல்லாதவர்களுக்கு தருவோம் என்பது மூலமாக அண்ணாவின் பொன்மொழியை காப்பாற்றுவோம்.

இதன் மூலமாக மக்கள் காட்டும் நன்றி புன்னகைக்கு இணையான வாழ்த்து வேறு எதுவும் இருக்க முடியாது. தி.மு.க. எப்போதும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அடையாளப்படுத்தப்படுவது இல்லை. எப்போதும் மக்களின் கட்சியாகவே அடையாளப்படுத்தப்படும். அந்த நற்பெயரை எந்நாளும் காப்போம். இன்னும் இரண்டே மாதங்கள் தான் இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க இருக்கிறது.

விதைக்க வேண்டும்

தி.மு.க. அரியணையில் அமர இருக்கிறது. கோட்டையை கைப்பற்ற இருக்கிறது. மக்கள் நமக்கு வழங்க இருக்கிற மகத்தான வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலத்தை நிச்சயம் அமைப்போம். கொள்கையற்ற உதவாக்கரை ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. தி.மு.க. அரசு மக்கள் கவலைகளை தீர்க்கிற அரசாக இருக்கும். மக்கள் கோரிக்கைகளை செயல்படுத்துகிற அரசாக இருக்கும். மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிற அரசாக இருக்கும். இந்த நம்பிக்கையை தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் தொண்டர்கள் விதைக்க வேண்டும்.

கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்கு காரணமான அரசாக நமது தி.மு.க. அரசு அமையும். நமக்கான நல்ல வளம் மிகுந்த தமிழ்நாட்டை நாளை அமைப்போம். இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு எனது பிறந்தநாள் செய்தி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story