7ம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளேன் - மு.க.ஸ்டாலின்


7ம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளேன் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 1 March 2021 5:37 AM GMT (Updated: 1 March 2021 5:37 AM GMT)

மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்சிமாற்றம் 2 மாதங்களில் ஏற்பட உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனைத்தொடர்ந்து அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

 சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.   

இதனிடையே பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி, கமல்ஹாசன்,எம்.பி.கனிமொழி,எம்.பி. தயாநிதி மாறன்  உள் பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், 'மு.க.ஸ்டாலின் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்,' என கூறி உள்ளார்.

திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,'தலைவர் தளபதி அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!அவர் தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை தரப்போகிறார். அவரது தலைமையில் அமையவிருக்கும் தி மு கழக ஆட்சியில் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்,' எனத் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,'மக்கள் நலனை மட்டுமே தம் லட்சியமாகக் கொண்டு, அயராது பாடுபடும் கழகத் தலைவர் திரு @mkstalinஅவர்கள் நீடூழி வாழ்ந்திட, வாகைகள் சூடிட இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இந்நாளில், தமிழகம் தலைநிமிரவும் தலைவர் தளபதி தலைமையில் நல்லாட்சி மலரவும் சபதம் ஏற்போம்! சாதனை படைப்போம்!,' எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,'விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்,' எனக் கூறியுள்ளார். 

 அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி  2 மாதங்களில் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது.

நேற்று முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

திருச்சியில் மார்ச் 7ந் தேதி மாநாடு போன்ற தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளது.திருச்சியில் மார்ச் 7ல் மிக முக்கியமான லட்சிய பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளேன். 

10 ஆண்டுக்குள் ஒவ்வொரு துறையும் அடைய வேண்டிய இலக்கை நான் வரையறுத்து இருக்கிறேன். மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்கள் பல கட்டங்களாக நடத்தியிருக்கும் கலந்துரையாடலில் இது முடிவெடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர்கள், பல்துறை அறிஞர்களுடன் விவாதித்து தொலைநோக்கு பார்வை ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தொலைநோக்கு பார்வை குறித்த ஆவணத்தை அடுத்த 20 நாட்களில் 2 கோடி குடும்பத்திடம் கொண்டு சேர்க்க உள்ளோம்.ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு பணியாற்றுவதில் இருந்து திமுக என்றும் பின்வாங்காது.

மோடி, அமித் ஷா பேசுவது குறித்து நான் கவலைப்படப்போவதில்லை. ஓபிஎஸ் - இபிஎஸ் கரங்களை பிடித்து உயர்த்திய மோடி ஊழலை பற்றி பேசலாமா?  என கூறினார்.

Next Story