கடலூர் அருகே பயங்கரம் தாய், மகள் வெட்டிக்கொலை


கடலூர் அருகே பயங்கரம் தாய், மகள் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 2 March 2021 4:28 AM GMT (Updated: 2 March 2021 4:28 AM GMT)

கடலூர் அருகே தாய், மகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

கடலூர், 

புதுச்சேரி மாநிலம் நோனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 48). இவர்களுடைய மகள் மாதங்கி என்கிற சந்தியா (24). மகன் சிவகுரு.

சிதம்பரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள எடையார்பாளையம் தென்னந்தோப்பு பகுதியில் விஜயலட்சுமி, சந்தியா ஆகிய 2 பேரும் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தாய்-மகள் படுகொலை

அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விஜயலட்சுமியும், சந்தியாவும் மர்மநபர்களால் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

அந்த இடத்தில் மதுபாட்டில்கள், கப்புகள், சிகரெட்டுகளும், பணமும் சிதறிக்கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் இறந்த விஜயலட்சுமி, சந்தியா ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 3 தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story