பலி எண்ணிக்கை 12,500-ஐ தாண்டியது தமிழகத்தில் மேலும் 474 பேருக்கு கொரோனா


பலி எண்ணிக்கை 12,500-ஐ தாண்டியது தமிழகத்தில் மேலும் 474 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 March 2021 4:45 AM GMT (Updated: 2 March 2021 4:45 AM GMT)

தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 500-ஐ தாண்டியது. நேற்று மேலும் 474 பேருக்கு கொரோனாள தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 49 ஆயிரத்து 930 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 276 ஆண்கள், 198 பெண்கள் என மொத்தம் 474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 171 பேரும், கோவையில் 41 பேரும், செங்கல்பட்டில் 40 பேரும், குறைந்தபட்சமாக கரூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம், விருதுநகரில் தலா 3 பேரும், அரியலூர், தர்மபுரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் தலா 2 பேரும், கரூர், ராமநாதபுரம், திருப்பத்தூரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, பெரம்பலூரில் நேற்று புதிதாக பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 72 லட்சத்து 13 ஆயிரத்து 597 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 52 ஆயிரத்து 16 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

5 பேர் உயிரிழப்பு

கடந்த ஜனவரி 8-ந் தேதி முதல் நேற்று வரை இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2,734 பேரில் 2 ஆயிரத்து 266 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 2,228 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 பயணிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. இதில் இருவர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் இருவரும் என மொத்தம் 5 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அந்தவகையில் சென்னை, செங்கல்பட்டில் தலா 2 பேரும், காஞ்சீபுரத்தில் ஒருவரும் என 3 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 12,501 பேர் உயிரிழந்துள்ளனர்.

482 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 482 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 506 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது தமிழகத்தில் 4 ஆயிரத்து 9 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story