ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் அரசியலில் இருந்து சசிகலா விலகல் திடீர் அறிவிப்பால் பரபரப்பு


ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் அரசியலில் இருந்து சசிகலா விலகல் திடீர் அறிவிப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 March 2021 5:27 AM GMT (Updated: 4 March 2021 5:27 AM GMT)

அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்ப தாக சசிகலா நேற்று இரவு திடீர் என அறிவித்தார். ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்க உள்ள சூழ்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து வி.கே.சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

உற்சாக வரவேற்பு

கடந்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி சென்னை வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சசிகலா சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.

கடந்த மாதம் 24-ந்தேதி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அவர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

பொதுமக்களையும் சந்திப்பேன்

அப்போது பேசிய சசிகலா, ‘தமிழக மக்கள், தொண்டர்களின் வேண்டுதலால் நலம் பெற்று திரும்பியிருக்கிறேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். விரைவில் தொண்டர்கள், பொதுமக்களையும் சந்திக்க நான் வருவேன்' என்று தெரிவித்து இருந்தார். அவரது பேச்சு தமிழக அரசியல் அரங்கில் மட்டுமின்றி அ.தி.மு.க.விலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டசபை தேர்தலில் சசிகலா எத்தகைய முடிவை எடுப்பார் என்று விவாதிக்கப்பட்டு வந்த வேளையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சசிகலாவை சந்தித்து பேசினர்.

திடீர் விலகல்

இதற்கிடையே அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாக கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தான் அரசியலை விட்டே விலகுவதாகவும், ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வதாகவும் சசிகலா திடீரென கூறியுள்ளார். இது குறித்து வி.கே.சசிகலா நேற்றிரவு வெளியிட்டுள்ள அந்த பரபரப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொற்கால ஆட்சி

நான் என்றுமே வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர ஒரு தாய் வயிற்று பிள்ளைகளான, ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்கு காட்டிய, தி.மு.க.வை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

பதவிக்கு ஆசைப்பட்டதில்லை

என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கி வரும் என் அக்கா ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story