எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு


எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 March 2021 3:41 AM GMT (Updated: 5 March 2021 3:41 AM GMT)

எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

சென்னை, 

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் 'ரேடியன்ஸ் மீடியா' என்ற நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்காக 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்' தயாரிப்பு நிறுவனம் எங்களிடம் ரூ.2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கியது. படத்தை வெளியிடுவதற்கு முன்னால் ரூ.1 கோடியே 75 லட்சத்தை கொடுத்து விட்டது. மீதமுள்ள தொகையை திருப்பித் தராமல் ‘நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளது. எனவே, பாக்கி கடன் தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து கடந்த 2-ந்தேதி உத்தரவிட்டார்.

தடை நீக்கம்

இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, கடன் தொகையில் ரூ.60 லட்சத்தை வழங்குவதாகவும், பாக்கி தொகையை வழங்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பி.டி.ஆஷா, "எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம், ரூ.60 லட்சத்துக்கான கேட்பு காசோலையை மனுதாரருக்கு வழங்கியுள்ளது. பாக்கித் தொகை சுமார் ரூ.81 லட்சத்தை, 12 சதவீத வட்டியுடன் வருகிற ஜூலை 31-ந்தேதிக்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளது. இதை மனுதாரர் தரப்பு ஏற்றுக் கொண்டதால், நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story